இன்று உலகில் வேதங்கள் என்ற  பெயரால் கற்பனைகளையும், கனவுகளையும், அறிவிற்கே பொருந்தாத கதைகளையும்  கலந்து உலா வரும் பல வேதநூல்களைக் காணமுடிகிறது. மனிதன் தான் விரும்பியவாறு  தன் கையாலே எழுதிவிட்டு அதை இறைவன் அருளியதாக வாதிடுகிறான். ஆன்மீகத்தின்  பெயரால் புனையப்படும் பல கதைகள் கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கும் அந்தக்  கதைகளில் ஒன்றை தெரிந்து கொண்டு நம் தலைப்புக்கு வருவோம்.
ஒரு படகோட்டியும், ஓர் ஆன்மிகவாதியும் அருகேயுள்ள ஆற்றில் படகில்  பயணம் செய்துகொண்டிருந்தனர்.. படகு புறப்பட்டு சிறிது நேரத்தில் அந்த  ஆன்மிகவாதி, தான் மதித்துப் போற்றும் தன் வேதத்தின் ஒரு பகுதியைச்  சுட்டிக்காட்டி படகோட்டியிடம் இதை நீ படித்திருக்கிறாயா…? என்று கேட்க,  அதற்கு படகோட்டி இல்லை என்று சொன்னானாம். இதைக்கேட்ட அந்த ஆன்மிகவாதி,  வாழ்க்கையில் ஒரு பகுதியை இழந்துவிட்டாயே… என்று வருத்தத்துடன் கூறினாராம்.
பின்னர் அவர் வேதத்தின் மற்றொரு பகுதியைச் சொல்லி, சரி, இதையாவது  தெரிந்து வைத்திருக்கிறாயா?… என்று கேட்க, அதற்கும் படகோட்டி இல்லை என்றே  பதில் கூறினானாம். இதைக் கேட்ட ஆன்மிகவாதி, உன் வாழ்க்கையில் சரி பாதியை நீ  இழந்துவிட்டாயே…! என்று கூறி நொந்துகொண்டாராம்.
பின்னர் மீண்டும் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி, எல்லாம் போகட்டும்!  இந்த வசனத்தையாவது தெரிந்து வைத்திருக்கிறாயா…? என்று கேட்க, அதற்கும் அந்த  படகோட்டி வழமைபோல் இல்லை என்றே பதிலளித்தானாம்… அதைக்கேட்ட அந்த  ஆன்மிகவாதி ஏளனத்துடன், என்னப்பா…! உன் வாழ்க்கையில் முக்கால் பாகத்தை  அநியாயமாக தொலைத்து விட்டாயே…! என்று வேதனையுன் கூறினாராம்.
இப்படியே படகு சென்று கொண்டிருக்கிறது. சிறிது நேரம் கழித்து படகோட்டி  அந்த ஆன்மிகவாதியிடம் பணிவுடன், ஐயா… தங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று  கேட்டானாம். அதற்கு அவர், தெரியாதப்பா… ஏன் கேட்கிறாய்…? என்று ஆவலுடன்  கேட்டாராம். இல்லை… இப்போது ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது…எனக்கு நீச்சல்  தெரியும். தப்பித்துக்கொள்வேன்… தாங்களோ முழு வாழ்க்கையையும் தொலைத்து  விட்டீர்களே…! என்று சொல்லிக்கொண்டே ஆற்றில் குதித்து, நீந்தித்  தப்பித்துக்கொண்டானாம். – இது தான் கதை.
இனி விஷயத்துக்கு வருவோம்… ஆன்மிகம் என்பது பெரும்பாலும் பழைய  விட்டலாச்சாரியார் கதைகளையும், நாம்வாழும் இந்த உலகை விட்டுவிட்டு வேறு  ஏதோ உலகங்களைப்பற்றி மட்டும் சொல்லுகின்ற செய்திகளாகவே இருந்து  வருகிறது.இப்படி ஒரு புறம் என்றால், அவ்வப்போது மனிதர்கள் தாம் விரும்பியதை  எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு, இது தான் வேதம் என்று மக்களை நம்பவைத்து,  மூட நம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் சாடி மக்களை எவ்வித  அறிவும் இருந்திராத ஒரு கற்காலத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.
வேதங்களில் கற்பனைக் கதைகள்
இப்படிப்பட்ட வேதங்களில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் எங்காவது இடம்  பெற்றிருக்குமா என்றால், அதற்கு நேர்மாற்றமான ஜோதிடக் கருத்துக்களும்,  பேய் பிசாசு, பில்லி, சூனியம் போன்ற கருத்துக்களும் தான் நிறைந்து  காணப்படுகின்றன. 
இவை இவ்வாறிருக்க, இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் என்று கூறப்படும் சில  வேதங்களோ… இறைவன் அருளிய வேத வசனங்களையெல்லாம் தன் விருப்பத்கேற்ப  மாற்றியமைத்து, மக்கள் தங்கள் சுயவிருப்பத்திற்கேற்ப  எழுதிவைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.. இவற்றிலும்,  மூடநம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கு முரண்படும் கருத்துக்களுக்கும் பஞ்சமே  இல்லை.
ஆக, ஆன்மிகம் என்பது வெறுமனே கடவுளை வணங்குவதையும், ஏதோ மனிதனுக்குப்  புரியாத ஒரு உலகத்தைப் பற்றி மட்டுமே சொல்லும் வேதங்களையும்  கொண்டிருப்பதால் விரக்தியடைந்து போன ஒரு சாரார் ”கடவுளே இல்லை” என்று  சொல்லும் முடிவுக்கு வந்து நாத்திகர்களாகி விட்டனர்.
இந்த வேதங்களின் போலித்தனத்தின் விளைவாக அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் ”மதம் ஒரு அபின்” போன்றது என்றே கூறிவிட்டனர். 
பிற வேதங்களில் வாழ்க்கை நெறிகள் அனைத்தும் இல்லை.
மனிதன் தான் பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாழ்வை எப்படி அமைத்துக்  கொள்ள வேண்டும் என்ற நெறிகள் எந்த வேதத்திலும் இருப்பதாகத்  தெரியவில்லை.அப்படி ஏதாவது வேதம் இருந்திருந்தால், மக்கள் செய்துவரும்  பெரும்பாலான பாவ காரியங்கள் தானாகவே தவிர்க்கப்பட்டிருக்கும். பிறருக்கு  உதவும் மனப்பான்மை பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
எல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம்
எல்லோருக்கும், எல்லா இடத்துக்கும் பொருந்தும் வகையில் அப்படி ஒரு வேதம் இருக்கிறதா என்று கேட்கும் மக்களுக்கு இதோ ஒரு நற்செய்தி…! 
ஆம்…! ஒரு வேதம் இருக்கிறது. அது இறைவனால் அருளப்பட்ட வேதம்தான்  என்பதற்கு எல்லா வகையான சான்றுகளோடும் இருக்கிறது.அதுதான் சுமார் 1430  வருடங்களுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன்.
“1430 வருடங்களுக்கு முன்னர் உள்ள வேதமாம்! இதுவரை ஒரு எழுத்து கூட  கூட்டாமல் குறைக்காமல் அப்படியே திருத்தப்படாமல் உள்ளதாம்.!”. நம்ப  முடிகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இனி வரும் செய்திகளை முழுமையாகப்  படித்து முடியுங்கள். இக்கேள்விக்கான பதில் தானாகவே கிடைக்கும்.
காலத்தால் மாறாத வேதம்
நாமே இந்த இந்த வேதத்தை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (திருக்குர்ஆன் 15:9) 
திருக்குர்ஆனை  அருளிய இறைவன் அத்துடன் நின்றுவிடாமல், அதைத் தானே பாதுகாப்பதாகவும்  உறுதியளிக்கிறார். இறைப்பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பதை இனிவரும்  செய்திகளை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இது (திருக்குர்ஆன்) மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். 
இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்கு உரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) (திருக்குர்ஆன் 14:52)
மனித வாழ்வுக்குத் தேவையானவை அனைத்தும்
இது மனித குலத்துக்குரிய வேதம்…என்பது சர!. அப்படியானால் அதில் மனித  வாழ்வுக்குத் தேவையானவை என்னென்ன சொல்லப்படிருக்கும் என்று அறிய ஆவலாய்  இருப்பீர்கள்.? 
இதோ ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மனிதன், காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை,  எப்படியும் வாழலாம் என்று இல்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று  திருக்குர்ஆனும் அதற்கு விளக்கமாக உள்ள இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின்  வாழ்க்கை வரலாறும் வலியுறுத்துகின்றன. 
“அந்நாளில் ( மறு உலக நீதி விசாரணை நாளில் உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள”. (திருக்குர்ஆன் 102:8)
மேற்சொன்ன வசனம், மனிதன் என்ற வகையில் நமக்கு இறைவன் அளித்துள்ள  உயிர், அறிவு, நேரம், பொருள் என அனைத்தைப் பற்றியும் இறந்த பின்  எழுப்பப்பட்டு மறு உலகில் விசாரணை செய்து சரியான தீர்ப்பை கடவுள்  வழங்குவார் என்பதைச் சொல்கிறது.
நல்லவற்றிலிருந்து  நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக் காகவும், உறவினருக்காகவும்,  அனாதைகளுக்காகவும், ஏழைகளுக் காகவும், திக்கற்றோருக்காகவும் (செலவிட  வேண்டும்)… (திருக்குர்ஆன் 2:215) 
சுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் பொதுநலத்தையும் பேண வேண்டும் என்பதை மேற்சொன்ன வசனம் அழகாக வலியுறுத்துகிறது.
நாம் நாள்தோறும் வகைவகையாக உணவுகளை உட்கொள்கிறோம். எவையெல்லாம்  உண்ணவேண்டும் எவையெல்லாம் உண்ணக் கூடாது என்று கூட ஒரு வேதம் கூறுமா? 
ஆம், கூறுகிறது… இதோ பாருங்கள்:
தாமாகச் செத்தவை,  இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப்பலியிட்டவை  உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன… (திருக்குர்ஆன் 5:3) 
இதே வசனத்தின் தொடர்ச்சியாக இன்னும் பலவற்றையும் மனிதன் சாப்பிடக் கூடாது என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. 
என்ன ஆச்சரியம்…! இன்றைய நவீன அறிவியல் கூட நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்த வசனம் சொல்வதைப் போன்று அப்படியே கூறுகிறது. 
மதுவும் சூதும்
“மதுவை நாடு முழுவதும் ஒழிக்கவேண்டும்” என்று கூறினார் தேசத்தந்தை  காந்தியடிகள். ஆனால் அவர் பிறந்த குஜராத்திலேயே இன்று மது சில தடைகளுக்கு  மத்தியிலும் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படுகிறது. 
ஆனால், இஸ்லாம் தனது அருள்மறை குர்ஆன் மூலம் மதுவை முற்றிலுமாகத் தடை செய்கின்றது. 
மது மற்றும் சூதாட்டம்  பற்றி (தூதரே…!) உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும்,  மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு தான்  இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது என்று நீர் கூறுவீராக….  (திருக்குர்ஆன் 2:219) 
இன்று  மனிதன் பெருள் ஈட்டுவதற்கு ஒரு வரைமுறையே கிடையாதோ என்று நினைக்கும்  அளவுக்கு எண்ணற்ற குறுக்கு வழிகள் கையாளப் படுகின்றன. தவறுகளைச் செய்யாத  மனிதர்கள் கூட எப்படியும் சம்பாதிக்கலாம் என்று மனம் போன போக்கில், மனித  ரத்தத்தை உறிஞ்சும் வட்டியை வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.  ஆனால், இறைவேதம் திருக்குர்ஆனோ வட்டியை கடுமையாகத் தடை செய்கிறது.
உடலை அழிக்கும் விபச்சாரம்
விபச்சாரம் மனித அழிக்கும் கொடிய செயல் எனக் கூறுகிறது இஸ்லாம். 
இதனால் தான் “விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்” என குர்ஆன் (17:32) மனித சமுதாயத்திற்குக் கட்டளையிடுகிறது.
இன்று உலகமக்களின் அழிவுக்கும் மேலைநாடுகளின் ஒழுக்க வீழ்ச்சிக்கும்  இந்த பாலியல் குற்றங்களே காரணமாகும் என உலகின் புள்ளி விவரங்கள்  பட்டியலிட்டுக் கூறுகின்றன.
வட்டி
வட்டியை உண்போர் (மறைமை  நாளில்) சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம்  வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ்  வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது  இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன்  சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது மீண்டும்  செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன்  2:275)
இன்று உலகில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
லஞ்சம்
உலக நாடுகளில் அதிகமாக லஞ்சம் வாங்குவோர் கணக்கிடப்பட்டு சமீபத்தில்  புள்ளிவிபரமாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில்; நம் நாடு கூட  இடம் பெற்றுள்ளது. இந்தக் கேவலமான லஞ்சத்தை ஒழிப்பதற்காக அந்தந்த  அரசாங்கங்களும் பல்வேறு சட்டங்களை இயற்றி, பலதரப்பட்ட முயற்சிகளையும்  மேற்கொள்ளத்தான் செய்கின்றன. எனினும், லஞ்சம் சிறிது கூட குறைந்த பாடில்லை.  
உங்களுக்கிடையே  (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்!  மக்களின் பொருட்களில் ஒரு பகுதியை தெரிந்துகொண்டே பாவமான முறையில்  சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 2:187) 
மேற்சொன்ன படிப்பினைகளையெல்லாம் சிறிதும் வழுவாது தன் வாழ்க்கையில்  நடைமுறைப்படுத்தும் ஒருவன், இதன் காரணமாக சிரமப்படும்போது, அவனைப்  பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கச் சொல்கிறது இஸ்லாம்.  விரக்தியடைந்து தற்கொலைப் பக்கம் கண்டிப்பாகப் போகக்கூடாது என்று இஸ்லாம்  கூறுகிறது. 
ஓரளவு அச்சத்தாலும்,  பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்  உங்களைச் சோதிப்போம். பொறுத்துக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக…!  (திருக்குர்ஆன் 2:155)…உங்களையே நீங்கள் கொன்று  விடாதீர்கள்….(திருக்குர்ஆன் 4:29) -
பெற்றோரைப்பேணல்
பெற்றோரைப்பேணல்
இனி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நம்மைப் பெற்று, பேணி வளர்த்து,  ஆளாக்கும் பெற்றோர் இடத்திலும், மற்றவர்களிடத்திலும் எப்படி நடந்து  கொள்ளவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்: 
அல்லாஹ்வை வணங்குங்கள்!  அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோருக்கும்,  உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை  வீட்டாருக்கும், தொலைவாக உள்ள அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும்,  திக்கற்றோருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்!  பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.  (திருக்குர்ஆன் 4:36).
பெற்றோருக்கு உபகாரம்  செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும்  அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரையும்  நோக்கி சீ… என்று கூட கூறாதீர்கள்! அவ்விருவரையும் விரட்டாதீர்கள்!  மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுங்கள்! (திருக்குர்ஆன் 17:23)
ஏழையின் துயர் துடைத்தல்
தர்மம் என்பது அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்யப்படும் ஒன்றாகவே  உலகத்தில் கருதப்படுகிறது. உலகின் அனைத்துநாடுகளிலும் எதற்கெல்லாமோ வரி  வசூலிக்கப்டுகிறது, 
ஆனால், ஏழைகளில் துயரை நிரந்தரமாகத் துடைப்பதற்கென்றே ஏழைவரி என்ற  பெயரில், வசதியுடையோரிடமிருந்து வரி வசூலித்துக் கொடுக்கும் ஒரே மார்க்கம்  இஸ்லாம் தான். 
இது பற்றி இறைவேதம் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
(தூதரே!) அவர்களின்  செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி,  பரிசுத்தமாக்குவீராக! (திருக்குர்ஆன் 9:103) 
இப்படி வசூலிக்கப்படும் ஏழைவரி யார் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது…
தர்மங்கள்,  யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள்  ஈர்க்கப்;பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்,  கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், திக்கற்றோருக்கும்  உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன். ஞானமிக்கவன்.  (திருக்குர்ஆன் 9:60)
உயிர்களையும் உடைமைகளையும் காத்தல்
மனித உயிர்கள் உயர்வானவை. உயர்வாக மதிக்கப்படவேண்டும். ஆனால், இன்று  உலகில் எங்கு பார்த்தாலும், சாதாரண சிறு கொலைகளிலிருந்து மிகப்பெரும்  இனப்படுகொலைகள் வரை சிறிதும் தயக்கமின்றி கொலைபாதகம் நிகழ்த்தப்படுகிறது.
இக்கொலைகளைச் செய்வோர் சாரதாரண மனிதர்களாக இருந்தால், சில காலங்களை  சிறையில் கழிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு உணவு, உறைவிடம் மருத்துவம் என  அனைத்து வசதிகளும் கேட்டவுடன் கிடைக்கிறது. இதே கொலைகளை சற்று செல்வாக்கு  மிக்கவர் செய்தால் அவருக்கு அதை விட இலகுவான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.  அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றனர். இது தான் பெரும்பாலும்  செய்யப்படும் நடைமுறை.
இது போன்றவற்றால்;, பாதிக்கப்ட்டவனின் மனக்குமுறல் சிறிதும்  துடைக்கப்படாது என்பதே உலகறிந்த உண்மை. ஆனால் இஸ்லாம் திருக்குர்ஆன்  மூலம்,…ஒருவர் மற்றொருவரைக்  கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு  மனிதரை அவர் வாழவைத்தால், எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்…  (திருக்குர்ஆன் 5:32) இவ்வாறு கூறுகிறது.
குற்றவியல் தண்டனைகள்
அத்தோடு நிறுத்திவிடாமல் கொலைக்கு மரணதண்டனை விதிக்க கட்டளை இடுகிறது.  இன்னபிற பெரும்பாவங்களுக்கும் கூட எல்லோருக்கும் எக்காலத்திலும்  பொருந்தும் அற்புத சட்டங்களை முன்வைக்கிறது. விரிவாக அறிந்து கொள்ள  வேண்டுமானால், திருக்குர்ஆனை விரிவாகப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம்.
அறிவியல் உண்மைகள்
வாழ்க்கைக்கு வழிகாட்டி..என்பது . சரி. இன்றைய அறிவியல் உண்மைகளை  உறுதிப் படுத்தும் சான்றுகள் ஏதேனும திருக்குர்ஆனில் உள்ளனவா என நீங்கள்  கேட்டால் அதற்கு பலப்பல சான்றுகளைக் கூறமுடியும். எனினும் விரிவை அஞ்சி சில  சான்று களை மட்டும் தருகிறோம்..
உலகம் உருண்டை என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்து  சொன்னவர் விஞ்ஞானி கலிலியோ! அவருக்கு அன்றைய மக்கள் கொடுத்த பரிசு என்ன  தெரியுமா? மரண தண்டனை!. 
ஆனால், அதையே கலிலியோவுக்கும் முன்னரே 1430 வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன் எவ்வளவு அழகாகக் கூறுகிறது பாருங்கள்:
(அவனே) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன். (திருக்குர்ஆன் 55:17) 
பூமி  தட்டையாக இருந்தால் ஒரு இடத்தில் மட்டும் உதித்து மறுஇடத்தில் மறைந்து  விடும். பூமி உருண்டையாக இருந்தால் தான் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும்,”  உதிக்கும் பல திசைகளும் மறையும் பல திசைகளும்” உருவாகின்றன.  (இந்தியா,அமெரிக்கா) “ஒன்றுக்கு மேற்பட்ட உதிக்கும் திசைகள், மறையும்  திசைகள்” என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவியல் உண்மையை  இந்த இறைவேதம் குர்ஆன் ஒரு மாபெரும் அறிவியல் விறபன்னரைப் போல் பேசுகிறது.  
இது ம்ட்டுமா?
”அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். அவனே இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்.(குர்ஆன் 39:5) 
இதில் “யுகவ்விரு” எனப்பயன் படுத்தப்பட்டுள்ள சொல் “சுற்றுதல்” எனப்  போருள் படுகிறது. அதாவது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு நிகரான  ஒருசெயல்ாகும் இது. பூமி உருண்டையாக இருக்கும் போது தான் இரவும் பகலும்  சுற்றி வரும் செயல் நிகழமுடியும். 
அது மட்டுமல்ல ஒரு படி மேலே சென்று சென்று பூமியின் வடிவத்தையும் தெளிவுபடுத்துவது இன்றைய ஆய்வாளர்களை வியப்பிலாழத்தியுள்ளது. 
“பின்னர் அவனே பூமியை விரித்தான் (குர்ஆன்:79:30) கூறுகிறது. 
இந்த இறைமறை வசனத்தில் வரும் “தஹாஹா” என்பது தீப்பறவையின் முட்டை  வடிவம் என்பதைக் குறிக்கிறது. அதாவது தீப்பறவையின் ஓரப்பகுதி தட்டையாக  இருக்கும். எனவே பூமி உருண்டையாகக் கூட இல்லாமல் முட்டை வடிவமாக இருக்கும்  எனக்கூறுகிறது. 
ஆம் விஞ்ஞானிகள் முழுமையான உருண்டை வடிவமாக இல்லாமல் முட்டைவடிவமானது எனக்கூறுகின்றனர். குர்ஆனின் உவமை விந்தையிலும் விந்தையல்லவா?
இதைப்போன்று விண்ணியியல், புவியியல், மண்ணியல், கடலியல், இயற்பியல்,  உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவ இயல், உடலின் செல்லியல்,கருவியல  போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிருபிக்கப்பட் வஞஞானக் கருத்துகளைக் கூறி  உலகையே வியப்பிலாழ்த்துகிறது.
திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை நிரூபிக்கும் மிகப்பெரும் சான்றாகும் இது.
இது இறைவனின் வேதம் தான்
அது சரி… திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம்தான் என்பதற்கு  என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பதற்கு முன்னர் நாமே அதைத்  தெளிவு படுத்துகிறோம்.
திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க எண்ணற்ற சான்றுகளை  திருக்குர்ஆனிலிருந்தே காட்ட முடியும. என்றாலும், அவற்றிலிருந்து ஒரே ஒரு  சான்றை மட்டும் பார்ப்போம்..
சுமார் 2000 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டை கொடுங்கோல் அரசன்  ஃபிர்அவ்ன் என்ற இரண்டாம் அலெக்சாண்டர் ஆண்டு வந்தான். அவனால் குடிமக்கள்  பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர் மூஸாவின்  படையை ஃபிர்அவ்ன் தன் படையுடன் துரத்துகிறான். எதிரே கடல் குறுக்கிடுகிறது.  தப்பிக்க வழியறியாது நின்ற மூஸாவின் படைகளுக்கு இறைவன் கடலின் குறுக்கே  பாதையை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.மூஸாவும், அவரது படைகளும் அவ்வழியே  தப்பிச் செல்வதைப் பார்த்த மன்னன் ஃபிர்அவ்ன் அவனது படைகளுடன் அதே பாதையில்  துரத்திச்சென்ற போது, இறைவன் அம்மன்னனை அவனது படையுடன் கடலில் மூழ்கடித்து  விடுகிறான். 
ஆனால் அம்மன்னனின் “உடலை மட்டும் பாதுகாப்போம” என்று கூறுகிறான்.  இச்சம்பவம் 1430 வருடங்களுக்கு முன்பே அருளப்பட்ட திருக்குர்ஆனில் அழகாகச்  சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள். 
உனக்குப் பின்வரும்  மக்களுக்கு நீ ஒரு சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்  (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம்  செய்வோராகவே உள்ளனர். (திருக்குர்ஆன் 10:92) 
இதில்  ஆச்சரியம் என்னவென்றால், மூழ்கடிக்கப்பட்டது அம்மன்னனும் அவனது படைகளும்  தான்! ஆனால் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மன்னன் ஃபிர்அவ்னின்  உடல் மட்டும் இன்று கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, எகிப்து  அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது நம்மை  வியப்பிலாழ்த்துகிறது. இந்த உடலை உலகப்பயணிகள் அங்கே சென்று கண்கூடாகப்  பார்த்துவருகின்றனர்.. 
இது ஒன்றே போதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு…!!! 
கல்வி, பொருளாதாரம். அரசியல் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் துறைகளிலும்  உள்ள பிரச்சினைகளுக்கும் அழகிய அற்புதத் தீர்வுகளைத் தந்து  கொண்டிருக்கிறது திருக்குர்ஆன்.
1430 வருடங்களுக்கு முன்பே இந்த அருள்மறை திருக்குர்ஆன் அருளப்பட்ட  போதிலும் இன்று நடப்பவை, இனி நடக்கப்போவது ஆகிய அனைத்துப்  பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளதால் “என்றும் இவ்வேதம் புதிது” என்பதைச்  சொல்வதற்காகத்தான் “வேதம் புதிது” என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்.
அவர்கள் இந்த குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் பூட்டப்படடுள்ளனவா? (திருக்குர்ஆன் 47:24) 
மேற்கண்ட இறை வசனத்தை உங்கள்  சிந்தனைக்கு வைக்கிறோம். இன்னும் பல அரிய செய்திகளை இறைவேதம் திருக்குர்ஆன்  தன்னகத்தே பொதிந்துள்ளது. தெளிவான சிந்தனையுடன் அனைத்து மதத்தினரும்  இவ்வேதத்தைப் படித்துப்பார்த்தால் இது இறைவனின் வேதம் தான் என்பதை புரிந்து  கொள்வார்கள். 
0 comments:
Post a Comment