நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே  சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது  சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது  உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. 
ஆக சுருங்கிய  தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம்  நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. 
இந்த  அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி  நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர்  டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:- 
காரணங்கள்:
நாம்  தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக  வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில்  ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை  ஏற்படுகிறது. 
முழு தூக்கம் இருக்காது:
யாராவது  குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர்  நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது  என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை  விடுபவர் மனம் தெளிவாக இருக்காது. 
உடல் மிகவும்  களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை  வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு  கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம்  போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
அத்தோடு மிக  தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும்  அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப்  பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை  ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க  வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க  கூடாது. 
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை  பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து  அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது  நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். 
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம். 
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை. 
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம். 
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும். 
மாரடைப்பு அபாயம்:
7  மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல்  ஏற்பட்டால் இது  ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி  தூக்கம் கலையலாம். 
ரத்தத்தில் காணப்படும் குறைவான  செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த  அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும். 
கட்டிலில்  மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை,  சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது,  இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க  வேண்டும். 
ஆபத்தான நோய்:
டான்சில்  வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ  குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு  நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட  குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. 
கழுத்தைச்  சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை  ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான,  தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது. 
ஆழ்ந்த  தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில்  நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு  `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும்  அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக  அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது. 
குறட்டை  விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில்  ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம். 
இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:
இந்தியர்களில்  பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம்  ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த  நிலை ஏற்பட்டுள்ளது. 
குறட்டை ஏற்படுவதற்கான  காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக்  கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. 
உங்கள்  தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து  விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக்  குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற  பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம். 
குறட்டையை குறைக்க:
ஆக்சிஜனை  உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள்  தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின்  வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். 
குறட்டையைக்  குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை,  கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள்  உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு  திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும். 
ஸ்பைரோ  மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல்  ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால்  குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. 
யோகாவில்  உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா,  மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது  முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர்  மரணத்தையும் தவிர்க்கலாம். 
சிகிச்சை முறை:
குறட்டை  பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும்  லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல்  சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான். 
அடுத்து  காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு,  உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக்  கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம். 
முற்றிய  நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது  என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும்  அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள  ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி,  காற்று நன்கு செல்ல உதவுகிறது. 
இதனால் அவர்கள்  குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது.  காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும்  கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே  ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும். 
அவரது  உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள்  பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது  எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக  படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது. 
ரத்த  அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த  நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம்  என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.            
0 comments:
Post a Comment